எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

மோனிகா லா ரோஸ்கட்டுரைகள்

திறவுகோல்

“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?" என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம். 

“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்" என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!" (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.

சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார். 

 

நம்பகமான அன்பு

ஏன் அதைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்கமுடியவில்லை? என் உணர்ச்சிகள் சோகம், குற்ற உணர்ச்சி, கோபம் மற்றும் குழப்பம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, எச்சரிப்பு சத்தத்திற்கு செவிகொடுக்காததினால், எனக்கு நெருக்கமான ஒருவருடனான உறவைத் துண்டிக்கும் வேதனையான முடிவை எடுத்தேன். ஆனால் இன்று நான் இருக்கும் அதே ஊரில் தான் அவளும் இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டவுடன், என்னுடைய எண்ணம் கடந்த கால நிகழ்வுகளை எனக்கு நினைப்பூட்டியது.

என் மனதை அமைதிப்படுத்த நான் சிரமப்பட்டபோது, வானொலியில் ஒரு பாடல் ஒலித்தது. அந்த பாடல் துரோகத்தின் வேதனையை மட்டுமல்லாது, அந்த தீங்கு விளைவித்த நபருடன் மீண்டும் சேருவதற்கு துடிக்கும் இருதயத்தை பிரதிபலித்தது. அந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில், என் இருதயத்தின் ஆழத்தில் இருந்த துக்கத்தை அறிந்து என்னையறியாமல் நான் கண்ணீர் சிந்த ஆரம்பித்தேன்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று பவுல் ரோமர் 12:9இல் அன்பைக் கடந்துசெல்லும் அனைத்தும் உண்மையானவை அல்ல என்பதை வலியுறுத்துகிறார். ஆயினும்கூட, உண்மையான அன்பை அறிந்து கொள்வதே நம் இதயத்தின் ஆழமான ஏக்கமாகும் - அது சுயத்தையோ சூழ்ச்சியையோ கொண்டுள்ள அன்பு அல்ல; இரக்கமும் தியாகமும் கொண்டுள்ள அன்பு. அன்பு என்பது பயத்தால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தேவையல்ல; மாறாக, இருவரின் நலனையும் பொருட்படுத்தும் ஓர் அன்பான அர்ப்பணிப்பு (வச. 10-13).

அதுவே நற்செய்தியாகிய சுவிசேஷம். கடைசியாக, நாம் நம்பக்கூடிய, நமக்கு எப்போதும் சேதம் விளைவிக்காத அன்பை நாம் கிறிஸ்துவின் மூலம் அடையாளம் கண்டுகொண்டோம் (13:10). சுதந்திரமாய் வாழும் வாழ்க்கையே அவருடைய அன்பில் வாழ்வதாகும்.

ஆழமான துயரம்

குணப்படுத்தமுடியாத ஒரு அரியவகை மூளைப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட கரோலின், ஒரு வித்தியாசமான சேவையினால் வாழ்வில் நம்பிக்கையும், நோக்கத்தையும் பெற்றாள். ஒரு தன்னார்வ புகைப்படக்காரராக, கடும் வியாதியுற்ற பிள்ளைகளையும், அவர்கள் குடும்பங்களையும் புகைப்படம் எடுத்தார். இந்த சேவையின் மூலமாய், குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளோடு இருக்கும் விலையேறப்பெற்ற தருணங்கள் புகைப்படமாகின. துயரமான, இன்பமான மற்றும் அழகான எல்லா தருணங்களும் படமாக்கப்பட்டது. அந்த குடும்பங்கள் அனைத்தும், இக்கட்டான தருணங்களிலும் அன்புகாட்டவே தெரிந்துகொண்டதாக அவள் அறிவிக்கிறாள்.
துயரத்தை படம் பிடிப்பதில் சொல்ல முடியாத ஒரு வல்லமை இருக்கிறது. அதின் அழிக்கக்கூடிய வல்லமையும், அதேநேரத்தில் அவற்றின் மத்தியில் இருக்கும் அழகையும், நம்பிக்கையையும் நாம் அனுபவிக்கமுடியும்.
யோபு புத்தகம் முழுமையும், கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் நடைபெற்ற ஒரு துயரத்தின் புகைப்படம் எனலாம் (1:18-19). பல நாட்கள் யோபுவோடு அமர்ந்திருந்த அவனுடைய நண்பர்கள், அவனுடைய அந்த துயரத்தினால் சலிப்படைந்து, அதை குறைக்கும்பொருட்டு, அது தேவனுடைய நியாயத்தீர்ப்பு என்று விளக்குகின்றனர். ஆனால் அதில் ஒன்றையும் ஏற்காத யோபு, இந்த துயர நிலையின் அனுபவத்தை சாட்சியாக, “கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும்” (19:24) என்கிறான்.
யோபு புத்தகத்தில், நம் துயரங்களினூடே ஜீவனுள்ள தேவனுக்கு நேரே திரும்புவது உளிவெட்டாகப் பதிந்துள்ளது (வச. 26-27). அவர் நம் வேதனையில் நம்மை தேற்றி, மரணத்திலிருந்து உயிர்தெழுதலுக்கு நம்மை

அறிவின் எல்லைகளைக் கடந்து

கோவிட்-19 தொற்றின் காரணமாக, தங்கள் வேலைகளை இழந்த அநேகருடைய வரிசையில் என் கணவரும் ஒருவர். அது, எங்கள் வாழ்வின் கடினமான நாள். தேவன் எங்கள் தேவைகளை சந்திப்பார் என்று நாங்கள் விசுவாசித்தோம். ஆனால் அது எப்படி நடக்கும் என்ற நிச்சயமில்லாமை எங்களை பயமுறுத்தியது.

குழப்பமான என் மனநிலைகளை கடக்கையில், பதினாறாம் நூற்றாண்டின் கவிஞர், சிலுவையின் ஜான் என்பவரின் பாடல்வரிகளை நினைத்து பார்த்தேன். “போகும்பாதை அறியாமல், உள்ளே சென்றேன்” என்று தலைப்பிடப்பட்ட அந்த பாடல், அர்பணிப்பின் பிரயாணம் மனிதஅறிவின் அனைத்து எல்லைகளையும் கடந்து, அனைத்திலும் தெய்வீகத்தை கண்டுகொள்ளும் ஆச்சரியத்தை சித்தரிக்கிறது.. எனவே நானும், எனது கணவரும் அந்த காலகட்டத்தில் அதைச் செய்ய முயற்சித்தோம். எங்களால் புரிந்துகொள்ளக்கூடிய, சமாளிக்கக்கூடியவைகளின் மீதிருந்த எங்கள் கவனத்தை; எங்களை சுற்றிலும் அழகான, எதிர்பாராத, விந்தையான வழிகளில் வெளிப்படும் தேவன் மீது திருப்பினோம்.

பவுல் அப்போஸ்தலன், காணப்படுகிறவைகளிலிருந்து காணப்படாதவைகளுக்கு, வெளித்தோற்றத்திலிருந்து உள்ளான நிஜத்திற்கு, தற்காலிக துன்பங்களிலிருந்து “மிகவும் அதிகமான நித்திய கனமகிமைக்கு” விசுவாசிகளை அழைக்கிறார் (2 கொரிந்தியர் 4:17).

அவர்களுடைய போராட்டங்களை குறித்து கரிசனை இல்லாமல் பவுல் இவ்வாறு வலிறுயுறுத்தவில்லை மாறாக அவர்கள் புரிந்தகொள்ளக் கூடியவைகளை அவர்கள் விட்டுவிடுகையில் தான் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் ஆறுதல், சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை அவர்களால் அனுபவிக்க கூடும் என்று அவர் அறிந்திருந்தார். (வச.10,15-16). கிறிஸ்துவின் ஜீவியம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது என்பதை அவர்களுக்கு அறியச்செய்வதற்காகவே பிரயாசப்படுகிறார்.

மகிழ்ச்சியை தெரிந்துகொள்ளுதல்

எழுத்தாளர் மார்லின் மக்என்டயர், தன் தோழியிடமிருந்து "மகிழ்ச்சியாயிருப்பதே பொறாமைக்கு எதிரானது" என்பதை தான் கற்றுக்கொண்ட விதத்தை பகிர்கிறார். இந்த தோழி மாற்றுத் திறனாளியாக, நெடுநாளாய் பல வலிகளோடு இருந்தவர், அவருடைய திறமைகளை அவர் விரும்பிய வகையில் வளர்த்திக்கொள்ள முடியாமல் அவர் உடல்நிலை அவர் திறன்களை மட்டுப்படுத்தியது. இருந்தபோதிலும், அவர் எப்படியோ தனித்துவமாக சந்தோஷத்தை அனுபவித்து மற்றவர்களோடும் மகிழ்ந்தார். அவர் மரிக்கும் முன்னர், தான் எதிர்கொண்ட ஒவ்வொன்றையும் பாராட்டி மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

"பொறாமைக்கு எதிர்மறையானது மகிழ்ச்சியாய் இருப்பது" இந்த புரிந்துகொள்ளுதல், எனக்குள் நீட்டித்திருக்கிறது. என் வாழ்விலும் இருக்கும் சில நண்பர்களை எனக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் தங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காமல், மற்றவர்களுக்காக ஆழமாகவும், உண்மையாகவும் மகிழ்ச்சி கொள்பவர்களாய் ​வாழ்கின்றனர்.

பொறாமை என்பது சுலபமாய் சிக்கிக் கொள்ளக்கூடிய வலை. அது நம்முடைய ஆழமான பாதிப்புகளையும், காயங்களையும், மற்றும் பயங்களையும் பயன்படுத்தி நாம் இப்படி இருந்தால் நமக்கு கஷ்டங்கள் இருக்காது, நாம் கவலைப்பட வேண்டியிருக்காது என்று நம்மோடு கிசுகிசுத்து கொண்டே இருக்கும்.

பேதுரு, புதிய விசுவாசிகளுக்கு 1பேதுரு 2இல் நினைப்பூட்டியது போல, பொறாமை நமக்கு சொல்லும் பொய்களிலிருந்து விடுபட இருக்கும் ஒரே வழி, சத்தியத்தில் ஆழமாக வேரூன்றுவது தான். எப்படியெனில், கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ஆழமாக ருசிப்பது; அதாவது ஆழமாக அனுபவிப்பது (வ.1-3). நாம் "சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்பு" கூரமுடியும் (1:22) எப்பொழுதெனில் ,"என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான" (1:23) தேவவசனமே நமது சந்தோஷத்தின் மெய்யான ஆதாரம் என்று நாம் அறிந்துகொள்ளும்.

நாம் உண்மையாகவே தெரிந்துகொள்ளப்பட்ட சநததியினராய், அவருக்குச் சொந்தமான ஜனமாயும், அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்க பட்டவர்களாயும் (2:9) இருக்கிறோம் என்பதை நாம் நினைவுகூரும்போது, மற்றவர்களோடு ஓப்பிடுவதை விட்டுவிடுவோம்.

கிறிஸ்துவைப் போல பரிபூரணராய்

காத்லீன் நாரிஸ் என்னும் எழுத்தாளர், “பரிபூரண வாதம் (Perfectionism) என்பது எனக்குத் தெரிந்த வார்த்தைகளிலேயே பயங்கரமான ஒரு வார்த்தை,” என்கிறார். அவர் நவீன காலத்து பரிபூரண வாதத்தையும், மத்தேயுவில் விளக்கியுள்ள பரிபூரணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார். நவீன காலத்து பரிபூரண வாதம் என்பது ஒரு தீவிர உளவியல் துன்பம். அது மக்களை எந்த ஒரு சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளவிடாமல் தடுக்கிறது என்கிறார். ஆனால் மத்தேயுவில் வரும் பூரணம் என்பது “முதிர்ந்த” அல்லது “முழுமையான” என்று பொருள்படுகிறது. “பரிபூரணம் என்பது வளர்ச்சிக்கு இடம் தந்து, முதிர்ச்சியடைந்தவர்களாய் மற்றவர்களுக்கு நம்மையே தருவதாகும்” என்று நாரிஸ் குறிப்பிடுகிறார். 

பரிபூரணம் என்பதை இந்த வழியில் புரிந்துகொள்ள மத்தேயுவில் ஒரு ஆழமான கதை இருக்கிறது. மத்தேயு 19ல் இயேசுவிடம் ஒருவன் வந்து “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறான் (வச. 16). இயேசு பதிலுக்கு “கற்பனைகளைக் கைக்கொள்” என்கிறார் (வச. 17). இதையெல்லாம் கைகொண்டிருக்கிறேனே இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன? என்று அந்த மனிதன் கேட்கிறான் (வச. 20). 

அப்பொழுது அந்த மனிதனின் ஐசுவரியம் தான் அவன் மனதைப் பற்றியிருக்கும் பிடி என்பதை இயேசு உணர்ந்துகொண்டார். எனவே இயேசு, “நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்” என்கிறார் (வச. 21). 

நாம் ஒவ்வொருவரும் பரிபூரணத்திற்கு அவரவருக்கு சாதகமான விளக்கத்தை வைத்திருக்கிறோம். நாம் பற்றியிருக்கும் ஆஸ்திகள் அல்லது பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கும் முயற்சி பயனற்றது. இன்று இயேசுவின் மென்மையான அழைப்பைக் கேட்டு உங்களை ஒப்படையுங்கள், பரிபூரணத்தில் விடுதலையடையுங்கள், அது தேவனால் மட்டுமே கூடும் (வச. 26).

சிறந்த ஞானமும் ஆயிரம் கண்களும்

“ஆத்துமாவின் நிலையை அனைத்து கோணங்களிலும் அலசுவதற்கு, ஒரு மேய்ப்பனுக்கு தேவனுடைய ஞானமும் ஆயிரம் கண்களும் தேவை” என்று திருச்சபை தலைவரான ஜாண் கிறிஸாஸ்டம் எழுதுகிறார். ஆவிக்குரிய ரீதியில் மற்றவர்களை நன்கு பராமரித்தல் எப்படி என்பது குறித்த விவாதத்தில் கிறிஸாஸ்டம் இப்படியாக பேசுகிறார். ஒருவரைக் கட்டாயப்படுத்தி குணமாக்குவது என்பது சாத்தியமில்லை என்பதினால், அவர்களை கரிசணையோடும் இரக்கத்தோடும் அவர்களின் இருதயத்தை அணுகுவதை அவர் வலியுறுத்துகிறார். 

அதற்காக வலியே இல்லாமல் அதை மேற்கொள்ள முடியும் என்று அர்த்தமல்ல என்றும் கிறிஸாஸ்டம் எச்சரிக்கிறார். ஏனெனில் “ஆழ்ந்த அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய ஒரு நபரிடம் நீங்கள் மென்மையாய் நடந்துகொண்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யத் தவறினால் அவர்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியாது. ஆனால் விரக்தியிலிருக்கும் அவரது உடம்பில் நீங்கள் இரக்கமின்றி கீறல் ஏற்படுத்தி சிகிச்சை செய்தால்... அவர் எல்லாவற்றையும் மறந்து, உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிப்பார்.”

கள்ள போதகர்களால் துன்மார்க்கத்திற்குள் தள்ளப்பட்டவர்களின் நடத்தையை விவரிக்கும் யூதாவும் அதே பிரச்சனையை சந்திக்கிறார் (1:12-13, 18-19). அந்த வகையான மரண அச்சுறுத்தல்களின்போதும், யூதா கோபப்படாமல் கையாளுவதற்கே அறிவுறுத்துகிறார்.

அதற்கு பதிலாக, விசுவாசிகள் அச்சுறுத்தல்களை சந்திக்க தேவனுடைய அன்பில் இன்னும் அதிகமாய் வேரூன்றவேண்டும் என்று போதிக்கிறார் (வச. 20-21). நாம் தேவனுடைய அன்பில் ஆழமாய் வேரூன்றும்போதே, சரியான நேரம், தாழ்மை மற்றும் இரக்கத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்யும் ஞானத்தை தேவனிடத்திலிருந்து பெறக்கூடும் (வச. 22-23). இந்த பாதையே, மற்றவர்களுக்கு சுகத்தை அடையச்செய்து, தேவனுடைய அன்பின் மகத்துவத்தில் இளைப்பாறச் செய்கிறது. 

லாப்ரடார் தேவதை

கேப் டேஷ்வுட்டும், அவருடைய செல்லமான கருப்பு லாப்ரடார் நாயாகிய சேலாவும் 2019ஆம் ஆண்டு ஒரு மறக்கமுடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளனர். வருடத்தில் 365 நாட்களும் பயணித்து மலையுச்சியை அடைந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். 

அவரிடத்தில் சொல்லுவதற்கு அழகான கதை ஒன்று உண்டு. “தவறான குடும்ப வாழ்க்கை” என்று சொல்லி, தன்னுடைய 16ஆம் வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். “நீங்கள் எப்போதாவது மக்களால் மனமடிவாக்கப்பட்டீர்கள் என்றால், நீங்கள் அதை மறந்து வேறொன்றில் கவனம் செலுத்துங்கள்” என்று அவர் சொல்லுகிறார். உங்களுக்குத் தெரியுமா? இந்த நபருக்கு மலையேற்றமும், அவருடைய செல்ல நாயான இந்த கருப்பு லாப்ரடாரின் நிபந்தனையற்ற அன்புமே அவருடைய கவனத்தைத் திசைதிருப்ப உதவியது.

என்னைப்போன்று விலங்குகளை அதிகமாய் நேசிப்பவர்கள், அவைகளை நேசிப்பதற்கு காரணம், எங்குமே கிடைக்காத, அவைகள் கொடுக்கும் இனிமையான, நிபந்தனையற்ற அன்பே. மற்றவர்களின் தோல்விகளைக்காட்டிலும் அவர்கள் சிரத்தையின்றி காண்பிக்கும் அன்பு சிறந்தது. தேவனுடைய அசைக்கமுடியாத, எல்லையில்லாத அன்பே உலகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது. 

சங்கீதம் 143ல், சங்கீதக்காரன் அவருடைய பெரும்பாலான ஜெபங்களில் தேவனுடைய அசையாத நிலையான கிருபையே, அவருடைய தனிமையில் அவருக்கு ஆறுதலாயிருந்துள்ளது என்கிறார் (வச.12). தனது வாழ்க்கை முழுவதும் தேவனோடு நடந்த அனுபவம், “அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்” என்று நம்புவதற்கு பெலப்படுத்துகிறது (வச. 8).

தேவனை நம்புவதற்கு போதுமான நம்பிக்கையோடு, நமக்கு தெரியாத பாதைகளில் அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்வோம் (வச. 8). 

பேசு, நம்பு, உணர்வடை!

“இரகசியங்களை சொல்லுதல்” என்னும் தன்னுடைய சிறப்பான படைப்பில், ப்ரெட்ரிக் ப்யூச்னர், “பேசாதே, நம்பாதே, உணராதே என்னும் விதிகளோடு நாம் வாழுகிறோம்; அதை மீறுபவனுக்கு ஐயோ” என்கிறார். அவர், “ஒரு சில காரணங்களால் செயலிழந்து நிற்கிற குடும்பங்களின் எழுதப்படாத விதிகளைக்” குறித்து விவரிக்கிறார். இந்த விதியானது, அவருடைய சொந்த குடும்பத்தில் ஏற்பட்ட அவருடைய தகப்பனாரின் தற்கொலையைக் குறித்து பேசவும் வருந்தவும் அவரை அனுமதிக்கவில்லை. அவருடைய வலி மிகுந்த தருணத்திலும் யாரையும் நம்பவிடாமல் அவரைத் தடுத்தது.

அதை தொடர்புபடுத்தி பார்க்கமுடியுமா? நம்மில் பலர் ஒரு சில விஷயங்களில் நம்முடைய பாதிப்பைக் குறித்து மௌனம் சாதிக்கும் தவறான அன்பின் கண்ணோட்டத்தோடு வாழ பழகிக்கொண்டோம். அந்த வகையான அன்பு ஒருவிதமான கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அது ஒருவகையான அடிமைத்தனம். 

நாம் இழந்துவிடுவோமோ என்ற பயத்தினிமித்தம் சிக்கியுள்ள இந்த நிபந்தனைக்குட்பட்ட அன்பிலிருந்து, இயேசுவின் அன்பு எவ்வாறு வித்தியாசமாயுள்ளது என்பதைப் பார்க்க நாம் மறந்துவிடக்கூடாது. கிறிஸ்துவின் அன்பின் மூலமாய் நாம் பயத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதையும் (ரோமர் 8:15), நமக்கு வாக்குப்பண்ணப்பட்ட மகிமையான சுதந்திரத்தை புரிந்துகொள்ளவும் (வச.21) முடியும் என்றும் பவுல் கூறுகிறார். உண்மையாய், ஆழமாய் நிபந்தனையில்லாமல் நேசிக்கப்படுவதை நாம் உணர்ந்தால். பயமில்லாத வாழ்க்கையை வாழ வெளிப்படையாய் பேசவும் நம்பவும் உதவியாயிருக்கும்.